ஆசிரியை திட்டியதால் எறும்பு பொடி சாப்பிட்டு 3 மாணவிகள் தற்கொலை முயற்சி : தனியார் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 11:39 am
Quick Share

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதாக 8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் எறும்பு பொடி தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, தனியார் விவிடி மேல் நிலைப்பள்ளியில் 8ம்வகுப்பு படிக்கும் ஆர். சண்முகபுரத்தை சேர்ந்த மார்ட்டின் மகள் ஜெபசுசி (13), சவேரியார் புரத்தை சேர்ந்த ராமசாமி மகள் 8ம் வகுப்பு படிக்கும் கனக தர்ஷினி (13) மற்றும் தாளமுத்துநகரை சேர்ந்த ஆனந்தராஜ் மகள் பிளஸ்சி தீபா உட்பட 3 மாணவிகள் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கு 6ம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியை சுந்தரி திட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறிது நேரத்தில் அந்த மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில், பள்ளியில் இருந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மூன்று மாணவிகளையும் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில், அந்த மூன்று மாணவிகளும், எறும்பு பொடியை தின்றது தெரிய வந்தது. தற்போது மாணவிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

பள்ளி ஆசிரியை திட்டியதால் மாணவிகள் எறும்பு பொடியை தின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி கூறுகையில், “மாணவிகள் பூச்சி மருந்து சாப்பிட்டதாக மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவர்கள் சாப்பிட்டார்களா என்று சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம். மேலும், மாணவிகள் எறும்பு பொடியை தின்றதால் அவர்களுக்கு உரிய சிகிச்சை எடுக்கப்படும். மேலும், அந்த மாணவிகள் தற்போது நலமுடன் இருக்கின்ற நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” கூறினார்.

Views: - 458

0

0