அண்ணாமலை குறித்த கேள்வி.. ஆவேசத்தில் ஒருமையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர் பாலு.!!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2025, 5:50 pm
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட “DMK FILES” குற்றச்சாட்டுகளில், தனக்கு எதிராக பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டதாகக் கூறி, திமுக மக்களவை உறுப்பினரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு, சைதா ப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அண்ணாமலை, உரிய ஆதாரமின்றி தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை பரப்பியதாக பாலு குற்றம்சாட்டியிருந்தார்.இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த ஜூலை 17-ம் தேதி அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஆனால், அன்று டி.ஆர்.பாலு ஆஜராகவில்லை. இதனால், வழக்கு ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
நீதிமன்றத்தில் பாலு தெரிவிக்கையில், “அண்ணாமலை, 21 நிறுவனங்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். ஆனால், 18 நிறுவனங்களுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை ஒன்றரை மணி நேரம் ஆஜராகி விளக்கமளித்தேன்,” என்றார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, அண்ணாமலை எழுப்பிய கேள்விகளுக்கு காட்டமாக பதிலளித்தார். “2004-ல் ஊழல் செய்ததால் 2010-ல் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்றும், அப்போது போகாத மானம் இப்போது போய்விட்டதா என்றும் அண்ணாமலை கேட்டது குறித்து, “அவர் கேட்க சொன்னாரா?” என செய்தியாளரிடம் கேள்வியை திருப்பினார்.
மேலும், “10 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு எங்கிருந்து வந்தது?” என்ற அண்ணாமலையின் கேள்விக்கு, “விடுயா, போயா,” என கூறி பாலு அங்கிருந்து புறப்பட்டார்.
