டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… கடை உரிமையாளர் உள்பட 5 பேர் படுகாயம்..!!

Author: Babu Lakshmanan
10 August 2022, 11:44 am

ராணிப்பேட்டையில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி அருகே செல்வராஜ் (58) என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில் ஒரு பகுதி டீக்கடையாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பால் காய்ச்சுவதற்காக தனியான சமையலறை மற்றும் அறையில் தனியாக சிலிண்டர் அடுப்பு ஒன்று மட்டும் உள்ளது.

இந்த நிலையில், செல்வராஜ் வழக்கம்போல் தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை கடையை திறந்து வியாபாரத்திற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் டீ அருந்துவதற்காக அந்த கடைக்கு வந்து டீ அருந்தி உள்ளனர்.

அப்போது, தீடீரென டீக்கடை உள்ளே உள்ள மற்றொரு அறையை திறந்த செல்வராஜ் மின் விளக்கை ஓளீர செய்ய சுவிட்சை ஆன் செய்து உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்தது விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், படுகாயம் அடைந்த செல்வராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் உடனடியாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் செல்வராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டனர்.

மீதமுள்ள மூன்று நபர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், டீக்கடையில் உள்ள தனி அறையில் இருந்த சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் வாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிலிண்டர் வாயு கசிவால் டீக்கடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஐந்து பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?