குளித்தலை பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் ; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி..!!

Author: Babu Lakshmanan
10 September 2022, 11:10 am
Quick Share

கரூர் ; குளித்தலை பழைய நெடுஞ்சாலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் சாலையை ஆக்கிரமித்து பெரும்பாலான கடைகள் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்டிஓ புஷ்பாதேவி தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம், சுங்ககேட், பெரிய பாலம் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடை, மளிகை கடை, ஹோட்டல் உள்ளிட்ட வணிகக் கடைகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்தவற்றை நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனர்.

அதன் பிறகு, நகராட்சி தேர்தல் வந்ததையடுத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கைவிட்டனர். அதனை தொடர்ந்து, முறையாக ஆக்கிரமைப்புகளை அகற்றவில்லை என பல புகார்கள் வந்தது. அதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் 10 நாட்களுக்கு முன்னரே அனைத்து வணிக கடைகளுக்கும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று கரூர் – திருச்சி பழைய நெடுஞ்சாலை குளித்தலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளின் முகப்புவாயில்கள், சாக்கடைநீர் செல்லும் வடிகாலை மறைத்துள்ள இடத்தையும் போலீசார் முன்னிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 518

0

0