பிரியாணி அரிசி பையில் கட்டுகட்டாக பணம்.. போலீசில் பரபரப்பு புகார்

Author: Hariharasudhan
24 October 2024, 1:56 pm

கடலூரில் விற்கப்பட்ட அரிசி பையில் வைத்திருந்த பணத்தில் மீதமுள்ள பணத்தை பெற்றுத் தர வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (அக்.22) இவருடைய மனைவியின் தம்பி சீனிவாசன் கடையில் இருந்துள்ளார். அப்போது, நெய்வேலி அருகே மேல்பாதி கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பூபாலன் (62) என்பவர் காலை 10 மணி அளவில் அரிசி வாங்க வந்துள்ளார்.

அப்போது கடையில் இருந்த சீனிவாசனிடம், 16 கிலோ பிரியாணி அரிசி வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசனும் கடையிலிருந்து 16 கிலோ அரிசியை எடை போட்டு பூபாலனிடம் கொடுத்து உள்ளார். பின்னர், சண்முகம் 10.30 மணி அளவில் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த அரிசி மூட்டைகளை பார்த்தபோது, அதில் அந்த 16 கிலோ அரிசி முட்டை மட்டும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், சீனிவாசனிடம் அரிசி மூட்டை எங்கே என கேட்டுள்ளார். அதற்கு அவர், அதை வழக்கமாக வந்து அரிசியை வாங்கிச் செல்லும் பூபாலனிடம் விற்று விட்டேன் எனக் கூறியுள்ளார். உடனே சண்முகம், சீனிவாசனிடம் அதில் 15 லட்சம் பணம் வைத்திருந்தேன், அதை எடுத்துக் கொடுத்து விட்டாயா என திட்டி உள்ளார். இதனையடுத்து, பூபாலனின் வீடு எங்கே இருக்கிறது என விசாரணை செய்து, அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, வீட்டில் இருந்த அவருடைய மகள் தாட்சாயனிடம், அந்த அரிசி மூட்டையில் பணம் இருந்தது எங்கே என கேட்டுள்ளார். அப்போது, தாட்சாயிணி 10 லட்சம் பணத்தை எடுத்து சண்முகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், அதில் நான் 15 லட்சம் வைத்திருந்தேன் என்றும், 10 லட்சம் தான் கொடுக்கிறீர்கள் எனவும் சண்முகம் கேட்டுள்ளார். அதற்கு தாட்சாயினி, அதில் 10 லட்சம் தான் பணம் இருந்தது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஜோசியத்தை கையிலெடுத்த ஸ்டாலின்.. கிறங்கடித்த இபிஎஸ்.. என்ன நடந்தது?

இதனால் அங்கிருந்த வந்த சண்முகம், இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சண்முகம் 5 லட்சம் பணத்தைக் கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், வடலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சண்முகம் 15 லட்சம் ரூபாய் பணத்தை ஏன் அந்த மூட்டையில் வைத்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!