சரித்திர பதிவேடு ரவுடி வெட்டிக் கொலை… சிக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!
Author: Udayachandran RadhaKrishnan30 May 2025, 2:24 pm
திருச்சி மாவட்டம், கல்லணை அருகே உள்ள கிளிக்கூடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை கடந்த 2020ஆம் வருடம் முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக 2022ஆம் வருடம் பிரகாசை கண்ணினின் உறவினரான அசோக்குமார் தனது நண்பர்களுடன் கொலை செய்துள்ளார்.
இந்த நிலையில் கிளிக்கூடு கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை 2022ஆம் வருடம் கொலையுண்ட கபடி வீரர் பிரகாஷ் என்பவரின் நினைவாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து நம்பர் ஒன் பாய்ஸ் கபாடி குழு என்ற பெயரில் கபடி போட்டியை நடத்தியுள்ளனர்.
இந்த போட்டியை அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன் முன்நின்று நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று இரவு கிளிக்கூடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் சரித்திர பதிவேறு ரவுடி அசோக்குமார் (40), அவரது நண்பர்களுடன் குடிபோதையில் பிரவீன் வீட்டு முன் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படியுங்க: மன உளைச்சலில் இருக்கிறேன்.. அரசியலே வேண்டாம் என தோன்றுகிறது : எம்எல்ஏ விரக்தி!
இதனை பிரவீன், அவரது சகோதரர் பிரபு, தந்தை பாலகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் என ஐந்து பேர் தட்டிக்கேட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன் தரப்பினர் அசோக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன், பிரபு, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.