கம்போடியாவில் சத்குரு! சத்குருவை வரவேற்று வாழ்த்து கடிதம் வெளியிட்ட கம்போடிய பிரதமர்!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 8:54 am

ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய கடிதத்தை, அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. சோக் சோகன், சத்குருவை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து அளித்தார்.

சத்குருவிற்கு, கம்போடியா விமான நிலையத்தில் அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர், அவரின் மனைவி மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் வந்து சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

கம்போடிய நாட்டு பிரதமரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது “கம்போடியா நாட்டு மக்கள் மற்றும் என்னுடைய சார்பில் சத்குரு அவர்களை சியம் ரீப் நகரத்திற்கு அன்போடு வரவேற்பதோடு, இங்கு நீங்கள் தங்கும் நாட்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். மேலும் உங்களின் தியான நிகழ்ச்சிக்கு அங்கோர் தொல்லியல் பூங்காவை நீங்கள் தேர்ந்தெடுத்தது மூலம் நாங்கள் கவுரவிக்கப்பட்டுள்ளோம். தாங்கள் இங்கு இருக்கும் காலம் அமைதியால் குறிக்கப்படட்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் சத்கோரி பதிவிட்டுள்ளார். அதில் அவர் “கம்போடியாவின் பிரதம மந்திரி ஹன் மானெட் அவர்களே, தங்களின் அழைப்புக் கடிதத்திற்கும், வரவேற்பிற்கும் நன்றி. இந்த தேசத்தின் நினைவுச் சின்னங்களும், கலாச்சாரமும் மனித புத்தி கூர்மைக்கும் உறுதிக்குமான ஒரு பிரமிக்க வைக்கும் அஞ்சலியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சத்குரு அவர்கள் கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர் வாட் போன்ற வரலாற்று மற்றும் தொல்லியல் இடங்களுக்கு சென்று அதன் கலாச்சாரம், ஆன்மீக மற்றும் அறிவியல் அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக சத்குரு அவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஆன்மீக அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக 10 நாட்கள் ஆன்மீக பயணமாக இந்தோனேஷியாவிற்கு கடந்த 19 ஆம் தேதி சென்றிருந்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது கம்போடியாவிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • income tax raid on hotels owned by arya ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?