ரூ.15,000 பணத்துக்காக கொத்தடிமையாக விடப்பட்ட 9 வயது சிறுவன் : சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2025, 11:18 am

ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த முத்து தனபாக்கியம் தம்பதிகள். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில், தங்கி வாத்து மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களிடம் ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஏனாதி அங்கம்மாள் தம்பதியினர் 15000 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு தங்களுடைய ஒன்பது வயது மதிக்கத்தக்க மகன் வெங்கடேஷ் என்ற சிறுவனை வாத்து மேய்க்க ஒப்பந்தம் போட்டனர்.

அவர்களுடைய ஒப்பந்தப்படி வாத்து மேய்க்க அனுப்பிய சிறுவனை 10 மாத காலத்திற்குள் சந்திக்கக் கூடாது, பேசக்கூடாது என்ற ஒப்பந்தம் போடப்பட்டது .

இந்த நிலையில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்த ஒன்பது வயது வெங்கடேஷ் என்ற சிறுவனுக்கு தீவிரமான மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.

வெம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முத்து (வாத்து ஒப்பந்ததாரர்) வெங்கடேஷை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்துவிட்டார்.

பின்னர் சிறுவனின் சடலத்தை அவர்களுடைய பெற்றோருக்கு தெரிவிக்காமல் வெண்பாக்கத்தில் புதைக்க முயற்சித்தனர். தகவல் அறிந்த அப்பகுதியினர் சிறுவனின் சடலத்தை புதைக்க அனுமதிக்காததால் யோசனை செய்த வாத்து மேய்க்கும் ஒப்பந்ததாரர் முத்து, தன் மனைவி தனபாக்கியம் , மகன் ராஜசேகர் ஆகியோருடன் சேர்ந்து , காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் சிறுவனின் சடலத்தை கடந்த மாதம் புதைத்து விட்டனர் .இது தொடர்பாக யாருக்கும் தகவல் அளிக்கவில்லை.

இந்நிலையில் சிறுவனை காண பெற்றோர்கள் விருப்பப்பட்டு முத்து தனபாக்கியம் தம்பதிகளிடம் கேட்ட பொழுது மழுப்பலான பதிலை கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் சத்தியவேடு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை, மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தனர்.

இதையும் படியுங்க: இவரா? இவர் விவகாரமான டைரக்டர் ஆச்சே- தனுஷின் கலாம் போஸ்டாரால் சலசலப்புக்குள்ளான நெட்டிசன்கள்!

அதன் பெயரில் ஆந்திரா மாநிலம் புத்தூர் நகர டிஎஸ்பி ரவிகுமார் தலைமையிலான போலீசார் வெம்பாக்கம் பகுதிக்கு வந்து முத்து தனபாக்கியம் ஆகியோரிடம் விசாரணை செய்ததில், சிறுவனுக்கு மஞ்சள் காமாலை முற்றிய போது இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் இறந்து விட்டதால் காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் ,வாத்து மேய்க்கும் ஒப்பந்ததாரர் ,ஆந்திர மாநில காவல் துறையினருடன் சேர்ந்து காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினரின் உதவியை நாடினர்.

பின்னர் புதைக்கப்பட்ட இடத்தில் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்னர் ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சிறுவனின் பெற்றோர்களும், வாத்து ஒப்பந்ததாரரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒன்பது வயது சிறுவனை வேலைக்கு வைத்தது சட்டப்படி குற்றம் என்பதாலும், பெற்றவர்களுக்கு தெரியாமல் புதைத்ததாலும் , எஸ் சி எஸ் டி சட்டப்பிரிவு, சட்டத்திற்கு எதிராக சிறுவனை வேலைக்கு அமர்த்திய பிரிவு, யாருக்கும் தெரியாமல் புதைத்த பிரிவு என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆந்திர மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணையின் முடிவில் வாத்து ஒப்பந்ததாரர் முத்து தனபாக்கியம் ராஜசேகர் ஆகிய மூவரும் கைது செய்யப்படுவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!