திருவள்ளுவரை விட கருணாநிதி உயர்ந்தவரா..? கிளம்பிய கேள்வி.. கருத்துக் கேட்பு கூட்டத்தில் திமுகவினரால் சலசலப்பு..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
31 January 2023, 1:55 pm

சென்னை : மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால், அவர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மெரினா கடற்பகுதிக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார். மேலும், பேனா நினைவு சின்னத்தை மெரினா கடலில் வைத்தால், நானே ஒருநாள் அதனை உடைப்பேன் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

முன்னதாக, பேசிய சமூக ஆர்வலர் ஒருவர் திருவள்ளுவரை விட கருணாநிதி உயர்ந்தவரா..? என்று கேள்வி எழுப்பினார். பேனா சிலையை 137 அடியில் அமைக்கிறார்கள். அப்போ, திருவள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா..? உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் திருவள்ளுவர் என்று பேசினார். அவரது பேச்சின் போது, திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத அவர், உங்களின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்பதை போல தொடர்ந்து பேசினார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேவேளையில், கடலில்பேனா_வேண்டாம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்