தேர்தல் பணிக்காக கோவையில் முகாமிட்ட கரூர் திமுகவினர்: வீடு மற்றும் கார்கள் மீது கல்வீசி தாக்குதல்..மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!

Author: Rajesh
14 February 2022, 9:03 am
Quick Share

கோவை: கோவையில் தேர்தல் பணி மேற்கொள்வதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் தங்கியிருந்த வீடு மற்றும் அவர்களது கார் ஆகியவற்றை நள்ளிரவில் மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் மாவட்ட திமுகவினர் கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முகம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் கோவை மாநகராட்சியின் 88 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் சகோதரரான சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான சென்ஹ்குளம் அருகேயுள்ள தோட்டத்து வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த சூழலில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த வீட்டின் மீதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கார் கண்ணாடி ஆகியவை சேதமடைந்தது.

இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட திமுகவினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக கோவை மாவட்ட நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். அங்கு சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக நள்ளிரவு முதல் காலைவரை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Views: - 925

0

1