உஷாரா இருங்க மக்களே…ஆர்டர் எடுக்க சென்ற ஹோட்டலில் ஆட்டையை போட்ட ஸ்விக்கி ஊழியர்: அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!(வீடியோ)

Author: Rajesh
23 March 2022, 10:47 am
Quick Share

திருப்பூர்: தனியார் உணவகத்தில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கே.பி என்.காலனி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில், வாடிக்கையாளர் கொடுத்த ஆர்டரின் பேரில் உணவு பெற்றுச் செல்ல வந்த ஸ்விக்கி ஊழியர் அங்கிருந்த மேசையில் இருந்த செல்போனை யாருக்கும் தெரியாமல் லாவகமாக எடுத்த செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலில் கடைக்குள் வரும் ஸ்விக்கி ஊழியர் ஆர்டர் கொடுத்து விட்டு ஓரமாக நிற்கிறார். அப்போது அங்கு மேசையின் மீது செல்போன் இருப்பதை பார்த்து விட்டு, அதனை எடுக்க அதன் மீது செய்தித்தாளை போடுகிறார். அதன்பின் கடை உரிமையாளரிடம் பேச்சு கொடுத்துவிட்டு மீண்டும், செல்போன் அருகே வந்து போனை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்றுவிடுகிறார்.

செல்போன் திருடு போன பிறகு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை உணவக உரிமையாளர் பார்த்துள்ளார். அப்போது, ஸ்விக்கி நிறுவன ஊழியர் தான் இந்த செயலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருட்டில் ஈடுபட்ட அந்த நபர் பெயர் குறித்த விபரங்கள் இதுவரை தெரியவில்லை.

ஆனாலும், செல்போன் திருட்டு தொடர்பான காவல் நிலையத்தில் இதுவரை புகார் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற உணவக உரிமையாளர்கள், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வாசகங்களுடன் இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தொழில் செய்யும் இடத்தில் ஸ்விக்கி ஊழியர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 1241

0

0