கச்சத்தீவு பற்றி பேசுவது பிரதமர் மோடியின் தேர்தல் STUNT : அண்ணாமலைதான் கண்டுபிடித்தது போல பிதற்றல்.. செல்லூர் ராஜூ!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2024, 6:09 pm

கச்சத்தீவு பற்றி பேசுவது பிரதமர் மோடியின் தேர்தல் STUNT : அண்ணாமலைதான் கண்டுபிடித்தது போல பிதற்றல்.. செல்லூர் ராஜூ!

மதுரை கே.கே.நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். கச்சத்தீவு பற்றி பிரதமர் பேசுவது குறித்த கேள்விக்கு, “கச்சத்தீவை பற்றி பிரதமர் பேசுவது தேர்தல் ஸ்டண்ட் தான். அண்ணாமலை புதிதாக ஏதோ கண்டு பிடித்தவர் போல பேசுகிறார்.

கச்சத்தீவு விவகாரம் குறித்து அண்ணாமலைக்கு எதுவும் தெரியவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக பொய் சொல்கிறது என்றால், பாஜக பயங்கரமான பொய் சொல்கிறது. மோடி பத்து ஆண்டுகள் ஆட்சியில் கச்சத்தீவை மீட்டு எடுத்திருக்கலாமே. தேர்தலுக்காக மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடிக்கிறார்கள்” என்றார்

அதிமுகவுக்கு பாமக உயிர் கொடுத்தது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “எங்கே தங்களுக்கு அதிகமான தொகை கிடைக்கும், ராஜ்யசபா சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கலைஞர் குடும்பம் போல, ராமதாஸ் குடும்பமும் குடும்ப அரசியல் செய்கிறது. பாஜக கூட்டணியை ராமதாஸ் ஏற்கவில்லை, அன்புமணியின் அழுத்தத்தில் தான் ஏற்று கொண்டுள்ளார். அதிமுகவுக்கு பாமக உயிர் கொடுத்தது என அன்புமணி சொல்வதெல்லாம் பெரிய ஜோக் தான்” என்றார்

அதிமுகவுக்கும் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என்ற முதலமைச்சரின் பேச்சு குறித்த கேள்விக்கு, “திமுக கொண்டு வரும் திட்டங்களுக்கு கலைஞரின் பெயர் வைப்பதற்கு காரணம் என்ன ஏன் பெரியார் அண்ணா ஆகியோரின் பெயர்களை வைப்பதில்லை. அதிமுக திராவிட சித்தாந்தத்தில் சரியாகப் பணிக்கிறது.

திமுக பேரளவில் தான் அண்ணாவின் பெயரை பயன்படுத்துகிறது, திமுகவினர் கலைஞரையே மறந்து விட்டார்கள். தமிழகத்தில் மன்னர் பரம்பரையை ஒழித்தாலும் திமுகவின் வாரிசு அரசியலை ஒழிக்க முடியவில்லை” என்றார்

ஜெயலலிதா இருக்கும் போது இரண்டாம் கட்ட தலைவர்கள் இப்படி பேசியதில்லையே, எடப்பாடி வந்தவுடன் இது போல் பேசுகிறார்களா என்ற கேள்விக்கு, “அதிமுகவில் ஜெயலலிதாவை திட்டாதவர் யாருங்க.. நாவலர், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் ஜெ.வை திட்டினார்கள்.ஜெயலலிதாவும் உதிர்ந்த ரோமம் என திட்டினார்.

யாரும் கூட்டணியில் வரவில்லை என்றால் கவலைப்படமாட்டார். வைகோவை 2011ல் அழைத்தார், அப்போது வந்திருந்தால் கட்சி நிலைத்திருக்கும். தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான். ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. இந்த தேர்தலிலும் அதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்” என்றார்

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…