ராட்சசன் பட பாணியில் மாணவியிடம் சில்மிஷம்.. வீட்டுக்கு வர வற்புறுத்திய ஆசிரியர் : விபரீத முடிவு எடுத்த 7ம் வகுப்பு மாணவி!!
Author: Udayachandran RadhaKrishnan27 மார்ச் 2022, 6:33 மணி
வேலூர் : அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நிலையில் மாணவி விபரீத முடிவு எடுத்ததால் சம்மந்தப்பட்ட ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வருபவர் கூலித்தொழிலாளியின் 13 வயது மகள்.
நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி வீட்டில் உள்ள தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி தற்கொலைக்கு முயன்ற காரணத்தை கேட்ட பெற்றோர் அதிர்ந்து போயுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறை நடத்திய விசாரணையில், 13 வயது மாணவிக்கு அதே அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் 55 வயதான முரளி கிருஷ்ணா என்பவர் சிறுமியிடம் தொடர்ந்து தகாத முறையில் நடந்து வந்ததாகவும், வகுப்பறையில் தனியாக அழைத்து சில்மிஷம் செய்ததாகவும். மேலும் அவரது வீட்டு முகவரியை கொடுத்து தனியாக வரும்படி வற்புறுத்தி வந்ததாகவும் இதனால் பயந்து போன மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி செய்வதறியாது நேற்று மாலை வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தெரியவந்தது.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்த திருவலம் காவல் துறையினர் திருவலம் அடுத்த சீக்கராஜாபுரம் பகுதியை சேர்ந்த 55 வயதான அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் முரளி கிருஷ்ணாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவர் வேறேதும் மாணவிகளிடத்தில் இது போன்று தகாத முறையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். தன்னிடம் கல்வி கற்க்கும் மாணவிகளிடம் ஆசிரியரே இது போன்ற ஈனச்செயலில் ஈடுபட்டது சக பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் கோபத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
0
0