தங்கை முறை கொண்ட சிறுமியுடன் காதல்… வார்னிங் கொடுத்த மாமன் மகன்… இறுதியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 1:43 pm
Quick Share

தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்ததால், இளைஞரை கொடூரமாக அடித்து கொன்ற மாணவியின் அத்தை மகனை காவல்துறை தேடிவருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே வாளமர் கோட்டை பகுதி வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த் (21). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவி தங்கை முறை என்பதால் இரு வீட்டாரும் கண்டித்துள்ளனர். ஆனால் ஆனந்த் தனது காதலை விடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சூரக்கோட்டையை பகுதியை சேர்ந்த மாணவியின் அத்தை மகனான உதயகுமார் (25) இது குறித்து கண்டித்துள்ளார். இப்பிரச்சினை தொடர்பாக நேற்று இரவு வாளமர்கோட்டை கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் நின்று கொண்டிருந்த ஆனந்தை உதயகுமார் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, “என் அத்தை மகளை நீ காதலிக்க கூடாது. அவளை விட்டு விலகி விடு என ஆனந்திடம் கூறினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த உதயகுமார் மண்வெட்டியால் ஆனந்தின் பின் தலை மற்றும் முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலே ஆனந்த் உயிரிழந்துவிட்டார்.

தகவலறிந்த தாலுக்க காவல்துறையினர் உடலை கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 890

0

0