+2 பொதுத்தேர்வு நடக்கும் பள்ளியில் திடீர் மின்வெட்டு… புழுக்கத்திலேயே தேர்வு எழுதிய மாணவர்கள்…!!

Author: Babu Lakshmanan
5 May 2022, 1:43 pm

தஞ்சை : தஞ்சையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால், மாணவர்கள் புழுக்கத்துடனேயே தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கின. தஞ்சை மாவட்டத்தில் 29,034 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். 225 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்கள், 107 தேர்வு மையங்கள் மூலம் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் 13,235 பேரும், மாணவிகள் 15, 195 பேரும், தனித்தேர்வர்கள் 604 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுத்திட 206 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 28ம் தேதி வரை +2 தேர்வுகள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தேர்வு நடக்கும் பள்ளிகளில் மின்தடை ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளே சென்றதும் மின்சாரம் இல்லை. 30 நிமிடம் வரை மின் வெட்டு நீடித்தது. புழுக்கத்தில் மாணவர்கள் தேர்வு எழுத துவங்கிய நிலையில், அரசர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததும் உடனடியாக சரிசெய்யப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை தேர்வு நாட்களில் மின் வெட்டு ஏற்படாமல் மின் விநியோகம் வழங்கிட உத்தரவிட்ட நிலையில், மின்வெட்டு ஏற்பட்டுள்ளது கவன குறைவே காரணம் என்கின்றனர் மாணவர்ளின் பெற்றோர்கள்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?