பாஜகவுக்கு தூது… எப்படி வேணுமோ எழுதிக்கோங்க.. கூட்டணியை உடைக்க முடியாது : கொதிக்கும் வைகோ!!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2025, 6:11 pm
பாலஸ்தீனத்து மக்கள் மீது ஆயிரமாயிரமாண்டுகளாக தாக்குதல்கள் நடந்து வந்தாலும் தற்போது பாலஸ்தீனத்தை கபழிகரம் செய்து பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது.
ஈழத்தில் சிங்கள அரசால் நடந்த இனப்படுகொலை போல தான் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடக்கிறது. பாலஸ்தீனத்தை தனி நாடு என இந்திய அரசு அங்கீகரித்து ஐ.நாவில் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
ரஷ்யாவில் இந்திய மாணவர்களை ராணுவத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள். இது தொடர்பாக வெளியிரவு துறை அமைச்சர், செயலாளர், பிரதமர் உள்ளிட்டோரை துரை வைகோ சந்தித்து பேசி உள்ளார். எந்த நாடும் இந்த அநீதியை செய்ததில்லை.
ரஷ்ய அதிபர் புதின் ஹிட்லராக மாறிவிட்டாரா ? ரஷ்ய ராணுவம் நாஜிக்களை போல புதினும் செயல்பட போகிறதா ? இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்திய மாணவர்களை திருப்பி அழைத்து வர வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இந்தியாவை மதவாத நாடாக மாற்ற முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள். மேகங்கள் கூடி கலைவதை போல தமிழ்நாட்டில் கட்சிகள் உருவாகி கொண்டு தினமும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
கூட்டணி அமைப்பது அவரவர் விருப்பம் மதிமுக வை பொருத்தவரை 8 ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் எடுத்த தீர்க்கமான முடிவான திமுக வை ஆதரிப்பது என்கிற அடிப்படையில் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். 2026 சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
சில பத்திரிகை கள் திட்டமிட்டே மதிமுக மீது கலங்கம் ஏற்படுத்த நாங்கள் பா.ஜ.க விற்கு தூது விடுகிறோம். மந்திரி பதவிக்கு ஏங்குகிறோம் என்கிறார்கள். அது அப்பட்டமான முழு பொய்.
மத்திய அரசு அரசியல் நோக்கோடு தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்த வருமான வரி, அமலாக்க துறை பயன்படுத்தி வருகிறார்கள். மத்திய அரசு தன் சுய நலத்திற்காக அந்த அமைப்புகளை பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் தான் இன்று அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்கிறது. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டமன்ற விடுதிக்குள் அனுமதியின்றி அமலாக்கத்துறை சென்று சோதனை செய்தது தொடர்பாக ஐ.பெரியசாமி நீதிமன்றத்தை நாடி உள்ளார். இதில் நீதிமன்றம் நல்ல முடிவை தரும். திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. அது நடக்கவே நடக்காது என்றார்.
