அடுத்தடுத்து ரயில் மோதி பலியாகும் யானைகள்: வனவிலங்குகளை பாதுகாக்க நீதிமன்றம் போட்ட புதிய கண்டிஷன்..!

Author: Vignesh
19 October 2022, 10:58 am
elephant_updatenews360 1
Quick Share

இரு பெண் யானைகள் கஞ்சிக்கோடு – வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி பலியானது குறித்து தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, கஞ்சிக்கோடு – வாளையாறு இடையே கடந்த 14ஆம் தேதி ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் இரு பெண் யானைகள் பலியாகியுள்ளதாகவும், காயமடைந்த குட்டி யானை காணவில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக நவம்பர் 24-ம் தேதி தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

elephant_updatenews360

மேலும், யானைகள் வழித்தடத்தின் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை குறைக்க உத்தரவிட்டும், பாலக்காடு மண்டல பொறியாளர் அளித்த அறிக்கையில், அதற்கு சாத்தியமில்லை என கூறியிருப்பது எந்தவிதமான அறிவியல் ஆய்வு அடிப்படையானதல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தைக் குறைத்து விபத்துக்களை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கும்படியும், இக்குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, நவம்பர் 24ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

இதனிடையே, மற்றொரு வழக்கில், யானைகள் வழித்தடத்தில் உள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அலாரங்கள் 24 மணி நேரமும் எச்சரிக்கை வாசகங்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் போது, யானைகளால் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த அலாரங்களை அகற்றி விட்டு, வேகத்தடைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல, கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

Views: - 326

0

0