கூலித் தொழிலாளியின் வீட்டை சூறையாடி தாக்குதல் நடத்திய கும்பல் : பதாகைகளுடன் தம்பதி தர்ணா!!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2023, 4:13 pm
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலு மூடு பிலாங்காவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயன் சரோஜா தம்பதி. கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மகன் அரசு வேலை கிடைத்து சென்றதால் இப்பகுதியில் உள்ளவர்கள் இந்த குடும்பத்தின் மீது பொறாமையில் உள்ளதாக கூறப்படுகிறது. மகள் பொறியியல் பட்டம் பெற்று தனியார் அமைப்பில் ஐஏஎஸ் பயிற்சி பெற்று வருகிறார்.
ஆனால் அப்பகுதியில் உள்ளவர்கள் நாங்கள் வசிக்கும் வீடும் நிலமும் அவர்களுக்கு சொந்தம் என கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருமகளை பார்க்க நான் சென்று விட்டு திங்கட்கிழமை காலை வந்தபோது வீட்டை சுத்தி அவர்கள் வேலி அமைத்து வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கல்வி சார்ந்த அனைத்தையும் அபகரித்து எடுத்து சென்று விட்டதாக சரோஜா கலியல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் போலீஸ் தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த சரோஜா மற்றும் அவர் கணவன் விஜயன் ஆகியோர் தங்கள் பிரச்சனைகளை பதாகையில் எழுதி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட 5 பேர் கொண்ட கும்பல் மீது சரோஜா புகார் அளித்துள்ளார்.