கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த வீடு… உயிருக்கு போராடிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 7:27 pm
Collapse
Quick Share

கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த வீடு… உயிருக்கு போராடிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை கிராமம் கலையரங்க தெருவை சேர்ந்த ரவிமுத்து. இவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

ரவிமுத்துவின் மனைவி புஷ்பம். இந்த தம்பதிக்கு 19 வயதில் சந்தியா என்ற ஒரு மகள் இருந்தார். சந்தியா போடி-குரங்கணி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

ரவிமுத்து இறந்து விட்டதால் தாய், மகள் இருவரும் தனியாக வீட்டில் வசித்து வந்தார்கள். அவர்களது வீடு மிகவும் பழமையானது ஆகும்.

இதனிடையே வீட்டின் மாடியில் புஷ்பத்தின் தம்பி முருகேசன் தங்கி இருந்தார். முருகேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் படுத்த படுக்கையாக இருந்தார்.
கல்லூரிக்கு விடுமுறை என்பதால் நேற்று காலை சந்தியா வீட்டில் தனியாக இருந்துள்ளார். புஷ்பம் வீட்டிற்கு வெளியே நின்று அருகே உள்ளவர்களிடம் பேசி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென புஷ்பத்தின் வீடு, சீட்டுக்கட்டுபோல் மளமளவென சரிந்து இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளது.

இதைக்கண்டதும் புஷ்பம் அலறி உதவி கேட்டு சத்தம் போட்டார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினரும் அங்கு கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய சந்தியாவை தேடினார்கள். அப்போது இடிபாடுகளுக்கு இடையே சந்தியா உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த புஷ்பம் சந்தியாவின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
மேலும் வீட்டின் மாடியில் இருந்த முருகேசனையும் தேடினர். அவர் இடிபாடுகளுக்கு இடையே தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதற்கிடையே தகவல் அறிந்த போடி தாலுகா போலீசாரும் அங்கு விரைந்தனர்.

இதையடுத்து போலீசார் முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில். சந்தியா தங்கியிருந்த வீடு பழமையானது என்பதால் மழை காரணமாக வலுவிழந்து இடிந்து விழுந்தாக கூறப்படுகிறது.

Views: - 293

0

0