தொழிலதிபர்களின் மனைவியை காதல் வலையில் வீழ்த்தி மோசடி… பொள்ளாச்சி சம்பவத்தை கண்முன் நிறுத்திய வாலிபர்!!
Author: Udayachandran RadhaKrishnan31 May 2025, 10:26 am
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு வாரமும் இவர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க கோவை வந்து செல்வது வழக்கம்.
இவரது செல்போன் எண்ணுக்கு போட்டிம் என்ற இன்டர்நேஷனல் ஆப் மூலம் கடந்த மாதம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தொழிலதிபர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க கோவைக்கு வரக்கூடாது என்றும் வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் சென்னைக்கு வந்து கொலை செய்து விடவும் தயங்க மாட்டேன் என்று அந்த நபர் மிரட்டியுள்ளார் .இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் அழைப்பு வந்த எண் குறித்து விசாரணை நடத்தினார். பிறகு கோவையில் உள்ள தனது மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது போட்டிம் ஆப் மூலம் அழைப்பு விடுத்து மிரட்டியது கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஸ்வீட்சன் என்ற வாலிபர் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து சென்னை தொழில் அதிபர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த எண் நாராயணன் என்ற பெயரில் சிம் கார்டு எடுக்கப்பட்டு அந்த சிம் கார்டை ஸ்வீட்சன் பயன்படுத்தி தொழிலதிபரை மிரட்டியது தெரிய வந்தது.
சென்னை போலீசார் கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த ஸ்வீட்சன்(30) என்ற வாலிபர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .தொடர்ந்து கோவைக்கு வந்த சென்னை தனிப்படை போலீசார் ரத்தினபுரியில் உள்ள ஸ்வீட்சன் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்ய சென்றனர்.
போலீசாரை பார்த்த ஸ்வீட்சன் வீட்டின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றார். போலீசார் அவரை துரத்திச் சென்று பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஸ்வீட்சனுக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பினர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த ஸ்வீட்சன் சென்னை தொழிலதிபர் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி பணம் நகைகளை மிரட்டி வாங்கியுள்ளார். ஸ்வீட்சன் இதே போல பல பெண்களிடம் குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலதிபர்களின் மனைவிகளை குறிவைத்து அன்பாக பேசி பழகி பின்னர் அவர்களுடன் எடுக்கும் போட்டோக்களை அவர்களது குடும்பத்திற்கு அனுப்பி விடுவேன் எனும் மிரட்டி பணம் நகைகளை பறித்து வந்துள்ளார்.
தனது மனைவிக்கு தெரிந்தே பல பெண்களிடம் இதுபோல ஸ்வீட்சன் பழகி வருவதும் இரவு நேரங்களில் பல மணி நேரம் வீடியோ கால்களில் அந்தப் பெண்களிடம் பேசி வருவதும் என தனது வாழ்க்கையை உல்லாசமாக கழித்து வந்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக தான் சென்னை தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது போலீசுக்கு விசாரணையில் தெரிய வந்தது.
சம்மனின் பேரில் சென்னை போலீசில் ஆஜரான ஸ்வீட்சனுக்கு கோவை சிங்காநல்லூர் நிறுவன உரிமையாளரின் மகள் தன்னை பற்றிய விபரங்கள் வெளியே வந்து விடக்கூடாது என்ற பயத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதன் பிறகு தலைமறைவான ஸ்வீட்சன்னை போலீசார் அவரை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மிஞ்சும் வகையில் கோவை வாலிபர் தொழிலதிபரின் மனைவிக்கு காதல் வலை விரித்தது மட்டுமல்லாமல் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.