ஆட்சியர் அலுவலகம் அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு… தப்பியோடிய கணவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
30 January 2024, 2:04 pm
Quick Share

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கோரம்பள்ளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற கணவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அமராவதி(28). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அமராவதி பங்கேற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள கோரம்பள்ளம் பேருந்து நிறுத்தத்திற்கு அமராவதி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே திடீரென வந்த அவரது கணவர் குணாவும், அவரது நண்பர்களும் சேர்ந்து அமராவதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

அப்போது, குணா அவரது நண்பர்களுடன் மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அமராவதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 629

0

0