கிறஸ்துமஸ் தினத்தன்று நடந்த இரட்டைக்கொலை ; சொந்த அக்கா குடும்பத்தையே சிதைத்த உடன்பிறந்த சகோதரன்!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 12:04 pm
Quick Share

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் சொத்து பிரச்சனை காரணமாக சொந்த அக்கா மற்றும் அத்தானை கொடுரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அப்பா,மகன் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவை சேர்ந்த கருப்பசாமி, விஜயலட்சுமி தம்பதியினரின் பிள்ளைகள் மாரியம்மாள், முருகேசன். தங்களின் குடும்ப சொத்தான அண்ணா நகர் 6-வது தெருவில் இருக்கக்கூடிய வீட்டினை கடன் பிரச்னை காரணமாக தனது அக்காவான மாரியம்மாளுக்கு முருகேசன் 29 லட்சம் ரூபாய்க்கு எழுதி கொடுத்துள்ளார்.

இந்த வீட்டில் தனது கணவர் ராம்குமாருடன், மாரியம்மாள் வசித்து வந்தனர். இதில் இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 10ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தினால், கை குழந்தை ஒன்றினை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அவருக்கு தற்போது ஒரு வயது ஆகின்றது. தற்போது தான் அந்த குழந்தையின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில், குடும்ப சொத்தான வீட்டினை தனது அக்காவிடம் விற்பனை செய்தது தொடர்பாக முருகேசன் அடிக்கடி தனது தங்கையான மாரியம்மாள் மற்றும் அத்தான் ராம்குமார் ஆகியோருடன் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். மேலும், முருகேசன் மனைவி முத்தமிழ் செல்வி 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீட்டு ஒன்று நடத்தி வந்ததாகவும், அதில் உறுப்பினராக இருந்த ராம்குமார் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள், எடுத்த சீட்டுப் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததால், ஒருகட்டத்தில் தனது அக்காவை தீர்த்துகட்ட நினைத்து சதி திட்டம் தீட்டிய முருகேசன், அவரது மகனான முகஷ் என்பவருடன் சேர்ந்து தனது அக்கா மாரியம்மாள் மற்றும் அத்தான் ராம்குமார் ஆகியோரை வீடு புகுந்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக தப்பி சென்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று சொத்து பிரச்சனை காரணமாக கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 319

0

0