அண்ணாமலையை பார்த்து நாங்கள் தான் சிரிக்கனும்… அவருக்கு பக்குவமே இல்லை ; அதிமுக முன்னாள்
அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 7:49 pm
Quick Share

அண்ணாமலையை பார்த்து தான் நாங்கள் சிரிக்க வேண்டி உள்ளதாகவும், அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கோவில்பட்டி நகராட்சி உள்பட்ட வள்ளுவர் நகர், பங்களா தெரு, கதிரேசன் கோவில் ரோடு, உள்ள 22 பூத்துக்கான முகவர்கள் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செய்தி மற்றும் விளம்பரத்துறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் அதிமுக நிர்வாகியிடம் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பின்னர் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்:- எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பதில் தொடர்பாக கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. தங்களது தலைவரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அந்த கருத்தினை கூறி இருக்கலாம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி தனித்து நின்றோம். 37 இடங்களில் வெற்றி பெற்றோம்.

1990ல் சந்திரசேகர் மற்றும் 1998ல் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக வர அதிமுக கொடுத்த ஆதரவு தான் காரணம். இதற்கு அண்ணாமலைக்கு சிரிப்பு வரவில்லையா..? அன்றைக்கு அவர் இல்லை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் பாலாஜியின் கருத்து, அவருடைய கருத்து என்று கூறி சென்று இருக்கலாம். இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. அண்ணாமலையை பார்த்து தான் நாங்கள் சிரிக்க வேண்டி உள்ளது.

ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என்பது திமுகவின் வாடிக்கை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிக்க கூடிய ரகசியம், தந்திரம், மந்திரம், சூட்சமம் எங்களுக்கு தெரியும் என்று திமுக தேர்தலின் போது கூறியது, ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக கூறியது.

ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டு நெருங்கும் நிலையில், நீட் தேர்வினை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்று நாடகம். மக்களை ஏமாளிகளாக நினைத்து ஏமாற்றுகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. அதே வேலையைத்தான் இன்று திமுக செய்கிறது. காலத்திற்கு ஏற்றார் போல் வேசத்தை மாற்றுகின்ற இயக்கம் திமுக.

நீட் தேர்வு விவகாரம் ஒன்றே திமுகவின் நிலைப்பாட்டை மக்களுக்கும், வெளி உலகிற்கு பறைசாற்றுகிறது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது அவர்களின் உரிமை, யாரும் யாருடனும் கூட்டணி சேரலாம். நாங்கள் மக்களை நம்புகிறோம். அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமையும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

சில கட்சிகளுடன் பேசி இருக்கலாம், கூட்டணி முடிவாகி இருக்கலாம், ஆனால் அதை தற்போது சொல்ல முடியாது. அதிமுக தலைமையில் அமையக்கூடிய மெகா கூட்டணி தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, என்றார்.

Views: - 188

0

0