சாலையில் சென்ற போது லேசாக இடித்ததால் வந்த வம்பு.. இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்… மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
10 May 2023, 8:20 pm

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞரிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்த அருணாச்சலம் மகன் மாடசாமி (29) என்பவர் கடந்த 7ம் தேதியன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மையவாடி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பால் கடை முன்பு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த தூத்துக்குடி குறுக்குசாலை கீழசெய்தலைப் பகுதியை சேர்ந்த காட்டு ராஜா மகன் செல்வம் (24) என்பவர் மீது தெரியாமல் இடித்துள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த அவரது நண்பர்களான சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் மகன் பிரதீஷ் (29) மற்றும் தூத்துக்குடி சிதம்பரநகரை சேர்ந்த ஜெகநாதன் மகன் செல்வகணேஷ் (27) ஆகியோர் மாடசாமியிடம் தகராறு செய்து, அவரை பீர் பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாடசாமி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலிசார் வழக்குபதிவு செய்து செல்வம், பிரதீஷ் மற்றும் செல்வகணேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதீஷ் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் கஞ்சா வழக்குக்கு, கொலை முயற்சி வழக்கு, என 12 வழக்குகளும், செல்வகணேஷ் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • kuberaa movie first review from famous reviewer இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!