இன்ஸ்டா பதிவால் தகராறு… கல்லூரியில் சீனியர் – ஜுனியர் மோதல் ; கெத்து காட்ட வீடியோவை பகிர்ந்த மாணவனால் வம்பு…!!

Author: Babu Lakshmanan
4 August 2023, 2:31 pm
Quick Share

இன்ஸ்டா பதிவுக்கு கமெண்ட் செய்ததால் சீனியர் ஜுனியர் மோதலில் இரும்பு கம்பியால் மாணவர்கள் தாக்கி கொள்ளும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தனியார் கல்லூரியில் படித்து வரும் சீனியர் மாணவர் ஒருவர் இன்ஸ்டாவில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு ஜுனியர் மாணவர் ஒருவர் சிரித்து ஸ்மைலி கமெண்ட் செய்துள்ளார். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரும் கடந்த 1ம் தேதி காங்கேயத்தில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து விஜயாபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை விட்டு இறங்கிய சீனியர் மாணவர்களை ஜுனியர் மாணவர் அடியாட்களை கொண்டு இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இந்த தாக்குதிலில் 4 சீனியர் மாணவர்கள் படுகாயமடைந்து திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு மாணவர் சுயநினைவின்றி ஐ.சி.யு வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது கல்லூரியில் கெத்து காட்ட இந்த தாக்குதல் சம்பவத்தை ஜுனியர் மாணவர் வீடியோவாக பதிவு செய்து தனது கல்லூரி குழுவில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நல்லூர் போலீசார் ஜீனியர் மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி கற்கும் வயதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 274

0

0