பெட்டிக்கடையா…? இல்ல டாஸ்மாக் கடையா..? கொடிகட்டி பறக்கும் சட்டவிரோத மதுவிற்பனை… நடவடிக்கை பாயுமா..?

Author: Babu Lakshmanan
5 June 2023, 3:33 pm
Quick Share

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு பெட்டிக்கடைகளில் வைத்து அதிக விலைக்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வரும் சம்பவம் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தின் மையப் பகுதியான பேருந்து நிலையத்தின் முன்பு அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகிலேயே இயங்கி வரும் பேக்கரியில் வைத்து சட்ட விரோதமாக காலை முதல் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 130 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெண்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வரக்கூடிய இடத்தில் வைத்து சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையால் வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்வோர் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதேபோன்று பல்லடம் திருப்பூர் சாலை சந்திப்பிலும் இருசக்கர வாகனங்களில் வைத்து மது விற்பனை நடைபெற்று வருகிறது. பல்லடம் பகுதிகளில் அரசு மதுபான கடை பார்களில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனைக்கு காவல்துறையின் கெடுபடியால் தற்போது பெட்டிக்கடை இருசக்கர வாகனங்களில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சட்டவிரோதமாக அதிக விலைக்கு காலையிலேயே மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சட்டவிரோத மது விற்பனையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 299

0

0