கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சோகம் : தகவலை கேட்டு உடனே ஸ்பாட்டுக்கு சென்ற அமைச்சர்… முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 6:21 pm
River 7 Dead 1- Updatenews360
Quick Share

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.

அதன்படி இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.

இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். உயிர் பிழைக்க அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர்.

அவர்கள் மயங்கிய நிலையில் காணப்பட்டனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. அந்த வேனில் 7 பேரும் ஏற்றி செல்லப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 7 பேரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

Views: - 720

0

0