பல அவமானங்களை சந்தித்தேன்.. காலேஜ்ல டான் பட ஹீரோ மாதிரி நான்… அமைச்சர் கே.என். நேரு உருக்கம்..!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 1:09 pm
Quick Share

மாணவர்களின் கல்விக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்து தர தயாராக இருப்பதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் கல்லூரி நாள் விழா, கல்லூரி வரலாற்றை தொகுக்கும் பெருந்திட்ட தொடக்க விழா, புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.

இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது :- 2035 ஆம் ஆண்டு உயர்கல்வியில் 50 சதவீதத்தை அடைய வேண்டும் என ஒன்றிய அரசு இப்பொழுது கூறுகிறது. ஆனால் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 50 சதவீதத்தை தமிழ்நாடு எப்போழுதே தாண்டி விட்டோம். அதற்கு காரணம் கலைஞரின் தொலை நோக்கு திட்டம் தான், எனக் கூறினார்.

உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில்,”கல்வி என்றாலே ஒரு சிலருக்கு மட்டும் தான் என இருந்த காலத்தில் சிறுபான்மையினருக்கு என்று 1951-ல் கல்லூரியை தொடங்கி உள்ளார்கள். என்றால் அது மிகப்பெரிய விஷயம். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கு காரணம் திராவிட இயக்கம். அதன் வகையில் தான் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.

நான் 1964ல் எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் பொழுது என் வகுப்பில் ஒரே ஒரு பெண் தான் படித்தார். ஆனால் இன்று ஆண்களை விட பெண்களே அதிகம் கல்வி பயின்று வருகிறார்கள். அதற்கு காரணம் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் தான். தற்போது அவர்கள் வழியில் உயர்கல்வியை மேம்படுத்த நம் முதலமைச்சர் செயல்படுகிறார். இஸ்லாமியர்கள் கல்வி பயில 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர். ஏராளமான மாணிவிகள் ஹிஜாபோடு அமர்ந்து இருக்கின்றீர்கள்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர கூடாது என்றார்கள். ஆனால் அவர்களின் திட்டத்தை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் செய்தவர் நம்முடைய முதலமைச்சர் தான்.

பல இதிகாசங்கள் இந்தியாவில் உள்ளது. ஹீமனிசம் என்கிற மனிதாபிமானத்தை கூறுவது திராவிட இயக்கம். மனைவிகளின் தங்க சங்கிலையை அடமானம் வைத்து கல்லூரி கட்டணம் செலுத்திய காலம் இருந்தது. இன்று திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதலமைச்சர், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு கல்லூரிகளில் இலவச கல்வி கட்டணம் மட்டுமல்லாமல் விடுதி கட்டணமும் அறிவித்தவர் உலகத்திலேயே நம்முடைய முதலமைச்சர் தான்.

எல்லோருக்கும் கல்வி பெற வேண்டும் என்கிற பெரியாரின் கனவை நினைவாக்கி வருபவர் முதலமைச்சர் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் மறந்து விட கூடாது. படிக்கும் போதே தனி திறமைகளை வளர்த்து கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் கனவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் 3,5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவோம் என்கிறார்கள். அப்படி இருந்திருந்தால் நாங்கள் படித்திருக்க முடியாது.

3,5,8 ல் பொதுத்தேர்வு வைத்தால் இடைநிற்றல் அதிகமாகி விடும். கல்லூரிகளில் நுழைவு தேர்வை ரத்து செய்தது கலைஞர் தான். அதை ரத்து செய்ததால் தான் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்கள். மாணவர்கள் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மாநில அரசு வகுக்கும் கல்வி கொள்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மாணவர்கள் விழிப்புணர்வோடு அதனை எதிர்த்து போராட வேண்டி வந்தால் போராட வேண்டும். அது தான் சமூகம் குறித்தான அக்கறை,” என்றார்.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், சரியாக படிக்காததால் பல அவமானங்களை சந்தித்துள்ளேன். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவர்களின் அடித்தளத்தை உருவாக்கும் வேலைக்கு உறுதுணையாக இருப்போம். நான் இந்த கல்லூரியில் படித்து சான்றிதழ் வாங்கவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின் இந்த கல்லூரியில் சான்றிதழ் வாங்கினேன். ஏனென்றால் இங்கு தான் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

மாணவர்களின் கல்விக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்து தர தயாராக இருக்கிறோம்.
3ஆம் வகுப்பிலிருந்தே நுழைவு தேர்வு வைத்து பா.ஜ.க வினர் எப்படியாவது நுழைய பார்க்கிறார்கள் அவர்களை நுழைய விடாமல் செய்வது மாணவர்களின் கையில் இருக்கிறது. புதிய கல்வி கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியதை புரிந்து கொள்ள வேண்டும், என்றார்.

Views: - 548

0

0