காதலிக்க சொல்லி ஒரே டார்ச்சர்… செருப்பால் அடித்த பெண்ணுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த வாலிபர்கள்..!

Author: Babu Lakshmanan
19 May 2022, 8:36 pm
Quick Share

திருச்சி அருகே காதலிக்க மறுத்து செருப்பால் அடித்த பெண்ணுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாக 3 வாலிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி (19). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், துவாக்குடி பிளக் தியேட்டரை அடுத்த மணியம்மை நகர் சாலையில் உள்ள தாத்தா வீட்டில் மாணவி தங்கி படித்து வந்தார்.

கடந்த 12ம் தேதி தனது தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக பிளக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த மூன்று நபர்கள் விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தற்போது தனியார் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது தாயார் பெல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், மாணவியை கடந்த ஒரு மாத காலமாக பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் கடந்த 11ஆம் தேதி மாணவியிடம் காதலை தெரிவித்ததாகவும், அதை மறுத்த மாணவி அந்த நபரை செருப்பால் அடித்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து 12ஆம் தேதி தாத்தா வீட்டிற்கு செல்லும் வழியில் மறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றியதாகவும் மாணவியின் வாக்குமூலம் அளித்ததாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மூன்று நபர்கள் யார் என்பது குறித்து ஒரு கோணத்திலும், மாணவி ஏதேனும் தவறு செய்து விட்டு அதை மறைப்பதற்காக இதுபோன்று நாடகமாடி வருகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை ஈடுபட்டுள்ளனர்.

Views: - 670

0

0