காவல் உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றிக் கொலை: குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்..!!
1 February 2021, 11:50 amதூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்த ஓட்டுநர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பாலு என்பவர் பணியாற்றி வந்துள்ளார். நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது கொற்கை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் முருகவேல் என்பவர் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த முருகவேலை எஸ்.ஐ. பாலு திட்டி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்ஐ பாலு மீது ஏற்றி கொலை செய்து விட்டு தப்பியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர்.
இவ்விபத்து குறித்து விசாரணை செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய ஓட்டுநர் முருகவேலை தேடி வந்தனர். இந்நிலையில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவை சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்த முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0
0