பெட்ரோல் டேங்கர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலி : 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கவலைக்கிடம்…

Author: kavin kumar
7 February 2022, 5:43 pm
Quick Share

திருப்பூர் : தாராபுரம் பைபாஸ் சாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் பைபாஸ் சாலையில் இன்று பெட்ரோல் இறக்கிவிட்டு பழனி சாலை வழியாக வந்த டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது பழனியில் இருந்து வந்த ஜவுளிக்கடை உரிமையாளரின் கார் டேங்கர் லாரியின் பின்புறம் மோதிய விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் தம்பம் பட்டியைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா, இவரது தாயார் சரோஜா , மனைவி யசோதா, இவர்களது குழந்தைகள் ஹரிஹரன், கௌசல்யா ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் இருந்தவர்கள் 5 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஜவுளிக்கடை உரிமையாளர் தம்மம்பட்டி ராஜா மற்றும் அவரது தாயார் சரோஜா இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜவுளி கடை உரிமையாளரின் மனைவி யசோதா, இவர்களது குழந்தைகள் ஹரிகரன் , கௌசல்யா மூன்று பேரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பலியான ராஜா இவரது தாயார் சரோஜா ஆகியோரின் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 1023

0

0