‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் என்பது மக்களுக்கு கொடுக்கப்படும் அல்வா : முன்னாள் அமைச்சர் சரமாரி விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2025, 4:25 pm
மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில் “மழைக்காலம் ஆரம்பமாக உள்ள நிலையில் 16 நீர்நிலைப் பகுதிகளில் தூர் வாராமல் உள்ளது. எப்போது வைகை ஆற்றில் தண்ணீர் வந்தாலும் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் வந்து சேரும்.
மதுரை மாநகரில் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுவதால் பனையூர் கால்வாய் தண்ணீர் செல்லும் பாதை உடைக்கப்பட்டது. ஆசியாவிலேயே ஒரு சில தெப்பக்குளம் தான் மாரியம்மன் தெப்பக்குளம் போன்று உள்ளது.
முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் 1296 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முடித்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 88 மேல்நிலைத் தொட்டி மூலமாக தண்ணீர் ஏற்றப்பட்டு அதன் மூலமாக சோதனை ஓட்டம் செய்தால் தான் அந்தத் திட்டம் முழுமையாகும்.
என்னுடைய வீட்டிற்கு இப்போது தான் பைப் லைன் போடப்பட்டுள்ளது, அதுவும் பல இடங்களில் சரியாக செய்யவில்லை, வைகை அசுத்தமான ஓடையாக காணப்படுகிறது, குப்பையும் கொட்டப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.
வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை நிறைந்துள்ளது சித்திரை திருவிழாவின் போது மட்டும் அகற்றப்படுகிறது. வைகை ஆற்றில் முழுக்க முழுக்க கழிவு நீர் கலக்கப்படுகிறது. வைகை மீண்டும் புனித நீராக மாற்றப்பட வேண்டும் இதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகை ஆற்றை சுத்தப்படுத்த தமிழக அரசிடம் நிதி இல்லை என்றால் மத்திய அரசிடம் நிதியை கேட்டு பெற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மாநகராட்சிகளுக்கான தரவரிசை பட்டியலில் மதுரை மாநகராட்சி 40-வது இடத்தில் உள்ளது வேதனையாக அளிக்கிறது, வரலாறு காணாத ஊழல் மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ளது.
200 திருமண மண்டபங்களுக்கு வீட்டு வரி போடப்பட்டுள்ளது. 19 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி வரி ஊழல் குறித்து தற்போதைய ஆணையாளர் சித்ரா விஜயன் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது?,

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு 45 நாட்களுக்குள் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மனுக்கள் வாங்கி வருகிறார்கள், கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுகளை மீண்டும் விண்ணப்பம் கொடுக்க சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மனுவிற்கு தற்போது எப்படி உதவித்தொகை வழங்க முடியும், உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது திமுகவின் அரசியல் ஸ்டண்ட், மக்களுக்கு கொடுக்கும் அல்வா” என கூறினார்.
