டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.4 லட்சம் கொள்ளை.! ஊழியர்களை கத்தியால் தாக்கி கொடூரம்.!!
9 August 2020, 1:32 pmவிழுப்புரம் : டாஸ்மாக் கடை ஊழியரை கத்தியால் குத்தி 4 லட்சம் பணம் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள கண்டாச்சிபுரம் அபிராமி நகர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் நேற்று இரவு சூப்ரவைசர் மோகந்தாஸ் மற்றும் சேல்ஸ்மேன்கள் அருணாச்சலம் மற்றும் சிவலிங்கம் ஆகிய மூவரும் வழக்கம் போல மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இரவு 8 மணியுடன் கடையை மூடிவிட்டு பின்னர் 9.30 மணியளவில் கணக்கு பார்த்து நேற்றைய வசூல் தொகை 3 லட்சத்து 95 ஆயிரத்து 580 ரூபாயை எடுத்துக் கொண்டு மூவரும் புறப்பட்டு உள்ளனர். அப்போது கடைக்கு வந்த 6 மர்ம நபர்கள் மது கேட்பது போல நோட்டமிட்டு மூவரையும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனை அறிந்து ஊழியர்கள் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஊழியர்கள் மூவரையும் கத்தியால் குத்தி, சேல்ஸ்மேன் சிவலிங்கத்தின் மோதிரம் மற்றும் நேற்றைய கணக்கு தொகையான பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த கண்டாச்சிபுரம் போலிசார் மூவரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மது கேட்பது போல வந்த 6 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த அரசு மதுக்கடையில் ஜூலை 17ம் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் கொள்ளையடிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.