நாங்க உங்க அடிமையில்லை.. உங்க கிட்ட பிச்சையா கேட்டோம்? சார் பதிவாளரை மிரள விட்ட விவசாயி.!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 12:52 pm

கோவை மாவட்டம் அன்னூரில், சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்காக 3600 ஏக்கர் நிலம் கையகப்படுத்த கடந்த 2022 ஆம் ஆண்டுஅரசு திட்டமிட்டது.

இதனை அறிந்த விவசாயிகள், விளை நிலங்களை கைப்பற்றக் கூடாது என அன்னூர், குப்பனூர், வடக்கனூர், புகலூர் உள்ளிட்ட ஆறு கிராம மக்கள், நமது நிலம் நமது, என்ற சங்கத்தை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிட்கோ தொழில்பேட்டைக்காக, விவசாய நிலம் கையகப்படுத்த ப்படாது என அரசு உறுதிமொழி அளித்தது.

கடந்த சில வாரங்களாக, அன்னூர் பத்திரப்பதிவு அலுவலக பதிவாளர் செல்வ பாலமுருகன், இந்த ஆறு கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் நிலங்களை விற்க முடியாமலும், வாங்க முடியாமலும் பல விவசாயிகள் அவதிப்பட்டனர். ஏக்கர் ஒன்றுக்கு 1கோடிக்கு விலை போன நிலத்தின் மதிப்பு 25 லட்ச ரூபாய் வரை விலை மலிந்து போனது.

நமது நிலம் நமதே விவசாய சங்க தலைவர் குமார ரவிக்குமார் தலைமையில், கடந்த திங்கட்கிழமை அன்று, அன்னூர் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஒன்று கூடி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது பொறுப்பற்ற முறையில் பதில் கூறிய பத்திர பதிவாளர் செல்வ பாலமுருகனின் பொறுப்பை உணர்த்தும் வகையில், நமது நிலம் நமதே சங்கத் தலைவர் குமார ரவிக்குமார் வார்த்தைகளால் வறுத்தெடுத்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டப்படி செய்ய வேண்டியது, நீதிமன்றம் நாடுவது, காவல்துறை பாதுகாப்பு, பத்திர பதிவாளர் என்ற முறையில் அவரின் கடமை என்ன, என்பது குறித்து சினிமா பட பாணியில் குமார ரவிக்குமார் பேசியது துளி அளவும் மறுக்கமுடியாததாக இருந்தது.

இதனை அங்கு கூடிய விவசாயிகள் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். இறுதியாக பத்திரப்பதிவு செய்வதற்கு இதுவரை தடை ஏதும் இல்லை.

தாராளமாக செய்யலாம் என அன்னூர் பதிவு அலுவலக பதிவாளர் செல்வ பாலமுருகன் தெரிவித்ததை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

அரசு அறிவிப்பு இன்றி தன்னிச்சையாக பதிவாளர் செயல்பட்டதாகவும், இதனால் விளை நிலங்களின் விலை, மிகக் கடுமையான வீழ்ச்சி அடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!