நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் : திருச்சி சிவா எம்.பி எச்சரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2025, 3:23 pm
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமை ஏற்க ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இதில் பங்கேற்றனர்.
அப்போது கண்டன உரையாற்றிய திருச்சி சிவா எம் பி பேசுகையில், இந்திய எதிர்ப்பு போராட்ட காலத்திலேயே அதை எதிர்த்து போராடிய பெருமை மாணவர்களுக்கே உண்டு. தற்போது கீழடிக்காகவும் மாணவர்கள் இங்கே கூடியுள்ளனர். கீழடியில் இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 17,914 பொருட்கள் கண்டறியப்பட்டன.
அவையெல்லாம் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பதும் சங்க காலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்ததை நிரூபிப்பதற்கு மகாராஷ்டிராவில் உள்ள புனே மற்றும் அகமதாபாத் ஆய்வகங்கள் மட்டுமன்றி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மெட்டா ஆய்வகத்திலும் அறிவியல் ரீதியாக ஆய்ந்து அறிந்து உறுதிப்படுத்திய உண்மையாகும்.
இந்திய நாட்டின் வரலாற்றில் ஹரப்பா தான் மூத்த நாகரிகமாக கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. ஆனால் கீழடி அகழாய்வு, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்தது.
ஆனால் இந்த ஆய்வினை ஏற்க மறுத்து அரசிதழில் வெளியிட மறுத்து சால்ஜாப்பு காரணங்களை கூறி வருகிறது மத்திய அரசு. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வினைத் தொடர்ந்து சிவகளை, கீழடி அகழாய்வுகள் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றுகின்றன.
வடக்கே இருப்பவர்கள் சொல்வதெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் ஆனது. தமிழர்கள் சொல்வதெல்லாம் ஆதாரங்களின் அடிப்படையில் என்கிறபோது இதனை மத்திய அரசு மறுப்பதற்கான காரணம் எது? சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரீகம் என பெயர் மாற்றம் செய்ய முனைப்பு காட்டுகிறீர்கள்.
இதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள பணம் ரூபாய் 2000 கோடி. சரஸ்வதி என்ற நதி இருந்ததற்கான சுவடு கிடையாது ஆதாரமும் கிடையாது. புராணங்களில் மட்டும் சொல்லப்படுகின்ற சரஸ்வதி நாகரிகத்தை புதுப்பிக்க நினைக்கிறார்கள்.
சேது கொள்வாய் திட்டத்தை இல்லாத ராமர் பாலத்தை சொல்லி தடுத்து விட்டார்கள். ஆதாரத்தின் அடிப்படையில் எங்களை அங்கீகரியுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். உலகத்தின் மூத்த மொழி தமிழ். கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது அகழாய்வு தொடங்கினார்.
மூன்று கட்ட அகழாய்வு மத்திய அரசால் இங்கு நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வின் போது, அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, மூன்றாவது அகழாய்வில் ஸ்ரீராமன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
அவர் இதற்கு மேல் இங்கு ஒன்றும் கிடைக்காது என்று கூறி சில குழிகளை மட்டும் தோண்டி ஆய்வை முடிவுக்கு கொண்டு வந்தார். அதற்குப் பிறகு தமிழக தொல்லியல் துறை அங்கு தொடர் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.
சுடப்பட்ட செங்கற்களால் ஆனா வீடுகள் கூரைகள் வேயப்பட்டும், குளியல் அறைகள் அமைக்கப்பட்டும், உறை கிணறுகளோடும் அன்றைய காலத்தில் சிறப்பாக வாழ்ந்ததை கீழடி வெளிக்காட்டியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளத்தில் பண்டைய ரோம் நாட்டோடு தொடர்புடைய பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
கடல் கடந்து வாணிபம் செய்வதில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் சிறந்து விளங்கி இருக்கிறான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவில் வேறு எந்த இனத்திற்கும் இல்லாத சிறப்பு இது. இது போன்ற எண்ணற்ற சான்றுகள் நம்மிடம் உண்டு.
அருகில் இருக்கின்ற சிவகளையில் மேற்கொண்ட அகழாய்வின்போது நெல்மணிகள் கிடைத்தன. அப்போதே வேளாண்மை செய்து தமிழன் வாழ்ந்திருக்கிறான் அது மட்டுமல்ல உலகிற்கு உணவும் அளித்திருக்கிறான் என்பதுதான் செய்தி. ஆனால் கீழடி ஏன் தலையாய இடத்தை பெறுகிறது என்றால், இங்கு நடைபெற்ற ஆய்வை போன்று தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடைபெறவில்லை என்பதுதான் காரணம்.
இங்கு கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் தமிழனை தலைநிமிர்ந்து வைக்கக் கூடியவை. அதை ஏன் மத்திய அரசு ஒத்துக்கொள்ள மறுக்கிறது? நமக்கும் அவர்களுக்கும் பண்பாட்டு போர், கருத்தியல் போர் நடைபெறுகிறது.
அரசியலால் தமிழகத்தை எதிர்கொள்ள முடியாத ஒன்றியத்தை ஆளுகின்ற பாரதிய ஜனதா பண்பாட்டுப் படையெடுப்பை நடத்துகிறது. இதனை மாணவர் பட்டாளம் அமைதியோடு பார்த்துக் கொண்டிருக்காது.
இதற்காக ஒரு அதிகாரியை பணியிடம் மாற்றம் செய்கிறார்கள். பழி வாங்குகிறார்கள். அத்தோடு அது முடிந்து விட்டது என எண்ணுகிறார்கள். ஆனால் நாடாளுமன்றம் தற்போது கூட இருக்கிறது.
இந்த முறை நாடாளுமன்றத்தில் எல்லா பிரச்சனைகளும் பின்னால்தான். முதலில் எடுக்கப் போவது கீழடி அறிக்கை விவகாரத்தை தான். கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் ஸ்தம்பிக்கச் செய்வோம் என்றார்.