நாளை பள்ளிக்கு விடுமுறையா? வானிலை மைய இயக்குனர் முக்கிய தகவல்!

Author: Hariharasudhan
16 October 2024, 5:38 pm

நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க உள்ளதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில், இன்று (அக்.16) வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னைக்கு தென்கிழக்கே 280 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 370 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை பெற்றுள்ளது. எனவே, இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக்.17) அதிகாலை சென்னை அருகே கரையைக் கடக்கும்” எனத் தெரிவித்தார்.

இருப்பினும் சென்னைக்கு ஏன் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் அளித்த பாலச்சந்திரன், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கரையைக் கடக்காததால் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

weather condition

வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும். இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: பாலங்களுக்கு கீழ் வாகனங்கள் செல்லலாமா? வேண்டாமா? எச்சரிக்கும் மூவர்ண கம்பங்கள்!

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற பல கட்டங்கள் உள்ளன. புயலாக மாறுமா என்பதை இப்போது கணிக்க முடியாது. ஏற்கெனவே பெய்த மழையின் அளவு, காற்றின் வேகத்தை பொறுத்தே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், நாளை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, நாளை தான் கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளதால், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?