ஒரு வடைக்காக எழுந்த தகராறு… முதியவரை தாக்கி விட்டு கல்லாப்பெட்டியில் கைவரிசை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…!!

Author: Babu Lakshmanan
28 September 2023, 10:20 am
Quick Share

மதுரை கீழக்குயில்குடி பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் வடைக்காக தகராறு செய்து முதியவரை தாக்கி கல்லாப்பெட்டியில் பணத்தை எடுத்துச் சென்ற பரபரப்பு CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட கீழக்குயில்குடி சீனிவாச காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி வயது (62). இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் – கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கும்பகோணம் டிகிரி காபி என்ற கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 23ம் தேதி அதிகாலை வழக்கம் போல் துரைசாமி கடையை திறந்து உள்ளார். அப்போது, அங்கு கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த காசிநாதன் மற்றும் நரேஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் வருகை தந்துள்ளனர். மேலும், கடை உரிமையாளரிடம் வடை எப்போது போடுவீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் துரைசாமி வழக்கம் போல் 5 மணிக்கு மேல தான் தயார் செய்வோம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தகாத வார்த்தையில் திட்டியதுடன் அவரை கீழே தள்ளி அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து, அருகில் இருந்த செங்கலை வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். படுகாயம் அடைந்த முதியவர் தலையில் கல்லை எறிந்ததால் ரத்தம் வரவே அதன் பிறகு கல்லாப்பெட்டியில் இருந்த பணம் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

படுகாயம் அடைந்த துரைசாமி அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து, துரைசாமி அளித்த புகாரியின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த சம்பவத்தினுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்., கும்பகோணம் டிகிரி காபி கடையை நடத்தி வந்த முதியவரிடம் வடைக்காக வம்பு இழுத்து தாக்கி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்த இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.

Views: - 250

0

0