யானை படுத்தும் பாட்டை விட இவங்க வேற… இளைஞர்களின் ஆபத்தான செல்ஃபி… விவசாயிகள் வேதனை..!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 2:09 pm

யானை படுத்தும் பாட்டை விட இவங்க வேற… இளைஞர்களின் ஆபத்தான செல்ஃபி… விவசாயிகள் வேதனை..!!

குடியாத்தம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், இளைஞர்கள் யானை முன் நின்று செல்பி எடுத்து புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அனுப்பு, VD பாளையம், DP பாளையம் என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து பத்து நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதுப்படுத்தி வந்த நிலையில், நேற்று இரவு ஸ்ரீராமுலு என்பவரின் விவசாய நிலத்தில் புகுந்து நெல் பயிர், கேழ்வரகு, மிளகாய் போன்ற பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.

பருவநிலை மாற்றங்கள் வருவது போல் விவசாய நிலங்களை சேதப்படுத்த காட்டுப்பன்றி, மான், யானை போன்ற வன விலங்குகள் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக இருப்பதாகவும், இதே நிலைமை நீடித்தால் அனைத்து விவசாயத்தையும் அழித்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளதாக விவசாயி வேதனை தெரிவிக்கின்றார்.

இது தொடர்கபாக குடியாத்தம் வனத்துறையினருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் சேதப்படுத்திய பின்னரே வந்து புகைப்படம் எடுத்துச் செல்வதாகவும், விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவது தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்களே இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் வரும் யானைகளை விரட்டும் பணியினை ஈடுபடுவதாகவும், அந்த சமயத்தில் கிராமத்து இளைஞர்கள் யானை முன் நின்று ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை தடுக்க வேண்டும் எனவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்ந்து, கிராமங்களுக்குள் உள்ள விவசாய நிலங்களை புகுந்து சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!