போதை மாத்திரைகள் வாங்கித் தராததால் ஆத்திரம்… 19 வயது இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை…!! போதையால் தடுமாறும் தலைநகரம்..!!

Author: Babu Lakshmanan
20 May 2022, 7:59 pm

போதை மாத்திரைகள் வாங்கித் தராமல் ஏமாற்றியதால் நடு ரோட்டில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரம் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ராகுல் என்பவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ராகுலை அருகிலிருந்தவர்கள் காவல் நிலையம் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி ராகுல் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொலை செய்யப்பட்ட ராகுல் (19) என்பவர் அதே பகுதியை சேர்ந்த மூன்று பேரிடம் போதை மாத்திரைகள் வாங்கி தருவதாகக் கூறி, 20 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வாங்கியதாகவும், பின்னர் பணத்தை வாங்கிக் கொண்டு போதை மாத்திரைகள் வாங்கி தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கௌரிசங்கர் (25), சரவணன் (20), ரகுமான் (20) ஆகிய மூன்று பேரும் ஹரிநாராயணபுரம் பகுதியில் உள்ள கிலாஸ் ஃபேக்டரி அருகே மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவ்வழியாக வந்த ராகுலை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகுலை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து ஆர்.கே நகர் காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!