கூட்டணியில் விரிசல் இல்லை.. ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன்? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2024, 12:56 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா , துணைமுதல்வராக திருமாவளவன் வர வேண்டும் என பேசி இருந்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக பேட்டியளித்த திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா , ஆதவ் அர்ஜுனா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து இருந்தார்.

கடந்த இரு தினங்களாக இந்த விவகாரம் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது திமுக – விசிக இரு கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை எனவும் விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை என தெரிவித்தார்.

என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோவில் ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள்.

மேலும் படிக்க: எத்தனை தடைகள் வந்தாலும் என் பயணம் தொடரும் : விசிகவின் ஆதவ் அர்ஜூனா அறிக்கை!

அந்த விவாதம் மேலும் ,மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது எனவும் அதனால் திமுக , விசிக இடையில் எந்த சிக்கலும் இல்லை, எந்த சிக்கலும் எழாது எனவும் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கு, உட்கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு கலந்து பேசி தான் எந்த நடவடிக்கையும் இருக்கும் எனவும்,
கட்சி விவகாரங்களை முன்னணி பொறுப்பாளர்கள் , பொதுச் செயலாளர் உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் இது குறித்து தொலைபேசி மூலமாக பேசியிருக்கிறேன் எனவும்,மீண்டும் அவர்களுடன கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம் என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!