தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது

Author: Hariharasudhan
29 October 2024, 2:36 pm

தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தெரிய வந்துள்ளது.

சென்னை: 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (அக்.29) அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல்கள் https://www.elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 791 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 833 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 ஆயிரத்து 964 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் உள்ளனர்.

மாநிலத்திலேயே அதிக அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6 லட்சத்து 76 ஆயிரத்து 133 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் (27) தொகுதி உள்ளது. இங்கு 3 லட்சத்து 38 ஆயிரத்து 183 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 37 ஆயிரத்து 825 பெண் வாக்காளர்கள் மற்றும் 125 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

அதேபோல், மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 1 லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் (164) கீழ்வேளுர் தொகுதி உள்ளது. இங்கு 85 ஆயிரத்து 65 ஆண் வாக்காளர்கள், 88 ஆயிரத்து 162 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க : ஊழலை பற்றி விஜய் பேசலாமா? பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!

மேலும், இவற்றில் திருத்தம், நீக்கம் ஏதேனும் இருப்பின் அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் படிவங்களை அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…