அதிமுக கொறாடா எஸ்பி வேலுமணி வீட்டில் முகாமிட்ட முன்னாள் அமைச்சர்கள்… லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு நடந்த திடீர் சந்திப்பு..!!

Author: Babu Lakshmanan
14 September 2022, 10:37 am
Quick Share

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்திற்கு வந்து அவரை சந்தித்து பேசினர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் கோவையில் 10 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.

சுமார் 9 மணிநேரம் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் எஸ்பி வேலுமணி பேசியதாவது :- மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்தது என்றும், தொடர்ந்து காவல்துறையை தவறான முறையில் திமுக பயன்படுத்துகிறது எனக் கூறினார். மேலும், இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றும், ஸ்டாலின் என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தால் முடியாது எனக் கூறிய அவர், ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் அமைச்சர்களிடம் ஸ்டாலின் குடும்பம் வாங்கியுள்ளதாகக் கூறினார்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்திற்கு வருகை புரிந்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், ஆர் பி உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜய்பாஸ்கர், தங்கமணி ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் சோதனை குறித்து எஸ்.பி. வேலுமணியிடம் கேட்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, சோதனையின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த அதிமுக மகளிர் அணியை சேர்ந்த இருவர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் கோவை குனியயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Views: - 736

0

0