2 ஆண்டுகளுக்கு பின் ஆடிப்பெருக்கு விழா : காவிரி கரைகளில் மஞ்சள் கயிற்றை மாற்றிய தம்பதிகள்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 8:48 am
Aadi Perukku - Updatenews360
Quick Share

காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் வழிபாடு ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்களும் பொதுமக்களும் காவிரியில் வந்து புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும் குலதெய்வங்களையும் மற்றும் மேட்டூர் அணைக்கட்டு முனியப்ப சாமி வழிபட்டு செல்வது வழக்கம்.

புதுமணத்தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அறிவித்திருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு புனித நீராடி வழிபடுவார்கள். பெண்கள் அனைவரும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வார்கள்.

கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல மணமகன் அமைய வேண்டியும், காவிரி தாயை வழிபட்டு மஞ்சள் கயிறுகளை கட்டி கொள்வார்கள்.

இதன் அடிப்படையில் இன்று காலையில் இருந்து சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் மேட்டூர் வந்தனர்.

இவர்கள் காவேரி பாலம் பகுதியில் ஆற்றில் நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமியை வழிபட்டு தங்கள் இல்லங்களுக்கு திரும்பினார்கள்.

இவ்விழாவை முன்னிட்டு காவேரி பாலம் பகுதியில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு பொருட்கள், ராட்டினங்கள், தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதால் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது.

காவிரி ஆற்றின் மற்ற எந்த பகுதிகளிலும் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Views: - 494

0

0