மக்களுக்கு வெற்று வாக்குறுதி.. கோபாலபுர நலனில் மட்டுமே கவனம் : முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2024, 5:15 pm

மக்களுக்கு வெற்று வாக்குறுதி.. கோபாலபுர நலனில் மட்டுமே கவனம் : முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை காட்டம்!

கேரள அரசு தடுப்பணை கட்டிவருவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது.

இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.

மேலும் படிக்க: தமிழகத்தில் தொடரும் சோகம்.. உயிரை காவு வாங்கிய பட்டாசு குடோன்.. உடல் கருகி ஒருவர் பலி!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, திமுக எப்போதும் தயங்கியதே இல்லை.

ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை.

உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!