இதுக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. உங்க தலைவரை பதில் சொல்ல சொல்லுங்க ; திமுகவினருக்கு அண்ணாமலை கூல் ரிப்ளை..!!

Author: Babu Lakshmanan
28 October 2022, 2:33 pm
Quick Share

சென்னை : தனது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய திமுகவினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூலாக பதில் அளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவும், அந்தக் கட்சியின் தலைவருமான அண்ணாமலை தான் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தமிழக அரசின் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார்.

இதனால், அண்ணாமலை குறித்து திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படியிருக்கையில், அண்ணாமலை கரூரை தாண்ட முடியாது என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழலில், நேற்று பாஜக சார்பில் தமிழுக்காக திமுக எதையும் செய்யவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு சவால் விடும் விதமாக, அமைச்சரின் சொந்த ஊரான கடலூரில் நடந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அப்போது, கடலூர் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..? என்றும், நீங்கள் பிற மாவட்டங்களுக்கு போகும் பொழுது தான் நீங்கள் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்பது தெரியும் என்றும் கடுமையாக விமர்சித்து பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கடலூரின் அண்ணாமலையின் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி திமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தனது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய திமுகவினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூலாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை பேச சொல்லுங்கள் என்று திமுகவினரை கேட்டுக்கொள்கிறேன். அதுவே தமிழக மக்களுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும்,” எனக் கூறினார்.

Views: - 278

0

0