தி.மு.க ஒரு நாடகக் கம்பெனி… மகளிருக்கான 1,000 ரூபாய் என சொல்லி காதில் பூ சுற்ற முயற்சி… அண்ணாமலை கடும் விமர்சனம்

Author: Babu Lakshmanan
15 February 2022, 4:29 pm

தி.மு.க என்பது கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கக் கூடிய ஒரு நாடக கம்பெனி என்று பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தஞ்சையில் இன்று மாநகராட்சி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து மகர்நோன்பு சாவடி பகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் விஜய மண்டபத் தெருவில் தறி நெய்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் அவரை கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். எப்போது ரூ.1000 கொடுப்பீர்கள் என கேட்டு வருகின்றனர். அதன்பிறகு தி.மு.க வீடு வீடாக சென்று பேப்பர் பிரின்டிங் கொடுத்து வருகின்றனர். உடனே ரூ.1000 கொடுப்போம் என கூறி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு காதில் பூ சுற்றும் வேலையை செய்து வருகின்றனர்.

தி.மு.க என்பது கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கக் கூடிய ஒரு நாடக கம்பெனி. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பொருளை கையில் எடுத்து அதனை பற்றி பேசுவார்கள். தற்போது தேர்தல் நேரம் என்பதால் நீட் தேர்வு பற்றி பேசி வருகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு அன்றைய தினம் மாலையில் நீட் தேர்வை விட்டுவிட்டு வேறு ஒரு தலைப்பை பற்றி பேசுவார்கள்.

தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மக்களிடம் மன்னிப்பு கேட்காமல் தி.மு.க சுற்றிக் கொண்டுள்ளது. 2014-க்கு பிறகு மீனவர்கள் மீது எங்குமே துப்பாக்கி சூடு என்பது இல்லை. தற்போது மீண்டும் தி.மு.க தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் நடைபெறுகிறது. தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்ததே காரணம். இரு கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை பத்திரமாக மீட்டது மத்திய பா.ஜ.க அரசு தான். அதன்பிறகு 57 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது. மீனவர்களை வரவேற்க பா.ஜ.க. தவிர எந்த ஒரு கட்சியும் வரவில்லை. பின்னரும் நலனில் அக்கறை உள்ள ஒரே அரசு மத்திய பாஜகதான்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட சபையை ஒத்திவைக்க வேண்டும் என்று அங்கு உள்ள ஆளுநர் கூறினார். ஆனால் முதல்வர் கேட்கவில்லை. மேற்கு வங்க முதல்வருக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் பேசியுள்ளார். இதனால் தமிழக முதல்வரை மேற்கு வங்க ஆளுநர் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசினார். ஏனென்றால் தமிழக முதல்வரின் நடவடிக்கை அப்படி இருந்தது. தற்போது கூட 4 மாநில முதல்வர்கள் டெல்லியில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் என்ன பேசினாலும் ஒன்றும் நடக்காது, எனக் கூறினார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?