ஸ்டாலின் செய்யாததை பிரதமர் மோடி செய்திருக்காரு… பொய்யான பிம்பத்தை உருவாக்கும் காங்கிரஸ் ; தமிழிசை சௌந்தரராஜன்!!

Author: Babu Lakshmanan
24 April 2024, 12:44 pm

பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருக்கின்றார் என்றும், காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகிறது என பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்து உள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்து உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும்.

அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக கடமையாகும். வாக்கு அளிப்பதற்கான அனைத்து ஆவணங்கள் இருந்த போதும் அவர்களது பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: TR பாலு அப்படி என்ன பண்ணீட்டாரு… ஜப்பானில் இருந்து வீடியோ வெளியிட்ட திமுக பிரமுகரின் மகன்… புது வீட்டுக்கு டிரைனேஜ் கனக்சன் தர மறுப்பதாக புகார்..!!!

மாநகராட்சி பணியாளர்களுக்கு இந்த பணிகளை வழங்கியதால் தான் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதை சரி செய்து நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஒருவரின் வாக்களிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு இருக்கக் கூடாது’ என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், ‘பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். 10 கோடி நபர்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீதம் இஸ்லாமிய மக்கள் பயன் அடைந்து உள்ளனர். அதே போல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய மக்கள் பலனடைந்து உள்ளனர். எந்தவித மத பாகுபாடும் இன்றி அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மோடி முன்வைத்து வருகிறார். அதுவே காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதி வருகிறது. 2006 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பேசியபோது நாட்டின் சொத்துக்கள் சிறுபான்மையினரின் உரிமை எனக் கூறினார். இப்படி பேசியதை தவிர அவர்களுக்கான முன்னேற்றங்கள் எதையும் காங்கிரஸ் கட்சியினர் செய்யவில்லை.

இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது. முத்தலாக் சட்டம் கொண்டு வந்து பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து உள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்ணுரிமை குறித்து பேசி வருகிறார். ஆனால் இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்ள நடவடிக்கை அவர் எடுக்கவில்லை. அதுவே பிரதமர் மோடி விஸா நடவடிக்கைகளை தளர்த்தி இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்வதற்கு வழிவகை செய்து உள்ளார். அலிகார் பல்கலைக் கழகத்தில் இதுவரை இஸ்லாமிய பெண்கள் துணைவேந்தராக இருந்ததில்லை. இப்போது நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் நாட்டின் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை மோடி முன்னெடுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அவர்கள் மட்டுமே சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது.

நாட்டின் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களிடம் மட்டுமே சென்று விடக் கூடாது என மோடி பேசி உள்ளார். இதனை சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என காங்கிரஸ் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் 25 கோடி ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. கோவிட் காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளே தடுமாறிய போது, அந்த சூழ்நிலையை சமாளித்து இலவசமாக தடுப்பூசி வழங்கி லட்சக் கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.

வாக்காளர் பட்டியலில் மொத்தமாக வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து தி.மு.க வும் அதன் கூட்டணி கட்சியினரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது அவர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த குழப்பங்களுக்கே அவர்கள் தான் காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தோல்வி பயத்தால் பா.ஜ.க இந்த கருத்தினை முன் வைப்பதாக கூறப்படுவது தவறானது. நான் உட்பட பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவோம். ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பது அவசியமாகும். இதில் தோல்வி பயம் எதுவும் இல்லை. பிரதமர் களத்தில் நின்று மக்களுக்காக பேசி வருகிறார். அதுவே ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு பயணம் செய்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் இலாக்கா இல்லாமல் சிறையில் உள்ளார், இரண்டு முதல்வர்கள் சிறையில் உள்ளனர்.

இதுவே இந்தியா கூட்டணியின் நிலையாக உள்ளது. ஸ்டாலின் வடநாட்டிற்கு சென்றால் இந்தி எதிர்ப்பு, சனாதனம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். எனவே தான் செல்லவில்லை. தி.மு.க வில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும் கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை. பா.ஜ.க வில் மட்டுமே யாரும் தலைவராகவும், ஆளுநராகவும் எந்த பாகுபாடும் இன்றி ஆக முடியும். ஏன் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார்?

தமிழ்நாட்டில் தான் மற்றொரு மொழியை கற்பதற்கு தடை உள்ளது. நீட்டை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த போது ஏன் முதல் கையெழுத்திட்டு அதை நீக்கவில்லை. விஜயகாந்த்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் மீது பிரதமரும் பா.ஜ.க வினரும் மிகுந்த அன்பு வைத்து உள்ளனர். என தெரிவித்தார்.

  • michael rayappan character was inspired from original character said by atlee ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ