செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவு.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

Author: Babu Lakshmanan
21 June 2023, 11:27 am
Quick Share

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 15-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியை பரிசோதித்து இரு மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையை சந்தேகிக்க முடியாது எனக் கூறி, அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு கண்டறியப்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செந்தில்பாலாஜிக்கு இன்று காலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் மருத்துவக் குழுவினர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அறுவை சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், 4 அடைப்புகள் அகற்றம் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மருத்துவர்கள், ரத்த நாளம் மூலமாக இருதய தமனியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 312

0

0