அமலாக்கத்துறையின் கஸ்டடியில் செந்தில் பாலாஜி.. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவு.. ஆட்கொணர்வு வழக்கில் 3வது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
14 July 2023, 3:50 pm
Quick Share

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது என்றும், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதி சிவி கார்த்திகேயன் பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பின்னர் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

அதேவேளையில், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டிருந்தார். இதனால் இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், இந்த வழக்கை விசாரித்தார்.

Senthil Balaji - Updatenews360

அதன்படி, இந்த வழக்கு, நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, செந்தில்பாலாஜியின் மனைவி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜாராகி வாதங்களை முன்வைத்தார். அனைத்து ஆதாரத்தையும் சேகரித்த பின்பே ஆதாரம் அடிப்படையில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும், கைது செய்யப்பட்ட பின், குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பதிவு செய்ய முடியாது, ஏனென்றால் அமலாக்கத்துறையினர், காவல்துறை அதிகாரிகள் அல்ல என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. மேலும், செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது என்றும், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதி சிவி கார்த்திகேயன் பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.

மேலும், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்று உறுதி செய்த நீதிபதி, அமலாக்கத்துறை கஸ்டடி எடுக்க முழு அதிகாரம் உள்ளதாகவும், சட்டவிதிகளின் படியே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் உடல்நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும், அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்த போதும் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீதிபதியின் இந்த தீர்ப்பையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விரைவில் கஸ்டடியில் எடுப்பது உறுதியாகியுள்ளது.

Views: - 256

0

0