இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!

Author: Babu Lakshmanan
24 August 2022, 9:25 pm
Quick Share

சென்னை ; இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- கடந்த 22.8.2022 அன்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெறும் 5-வது நிகழ்வாகும்.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவர்களது படகிற்கான உரிமையை கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலேயே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 328

0

0